எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

“எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein Files) என்றால் என்ன என்று பலர் என்னிடம் உள்பெட்டியிலும் வாட்சப்பிலும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள், அவர்களுக்காக இந்த சுருக்கமான பதிவு..

அமெரிக்க நிதி முதலீட்டாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் விசாரணை ஆவணங்களின் தொகுப்பு சமீபத்தில் வெளிவானது. இதில் நீதிமன்ற ஆவணங்கள், சாட்சியங்கள், விமானப் பயணப் பதிவுகள், மின்னஞ்சல்கள் மற்றும் பல வழக்கு ஆவணங்கள் அடங்கும். இவை ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ஒரு அரசு அறிக்கையாக அல்லாது, பல ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் விசாரணைகள் மூலமாக பொதுமக்களுக்காக ஒரு வெளிப்படை தன்மைக்காக வெளியிடப்பட்டன.

இந்த ஆவணங்கள், சிறுமிகளை பாலியல் சுரண்டலில் ஈடுபடுத்திய குற்றச்செயல்களை மேற்கொண்டபோதும், எப்ஸ்டீன் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உயர்வட்டங்களில் எவ்வாறு செல்வாக்கை பெற்றிருந்தார் என்பதை வெளிப்படுத்துகின்றன. அவரது செல்வம், தனியார் விமானப் பயணம், மற்றும் நன்கொடைகள் மூலம் சமூகத்தில் எத்தகைய மரியாதையை நம்பிக்கையை உருவாக்கியது என்பதை இந்த விசாரணைகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், ஆவணங்களில் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருப்பது குற்றத்தில் ஈடுபட்டதாக கருத முடியாது என அதிகாரிகள் சமீபமாக மழுப்பி வருகின்றனர்.

எப்ஸ்டீனின் வரலாறு 2008ஆம் ஆண்டில் பொதுமக்கள் கவனத்திற்கு வந்தது. அப்போது புளோரிடாவில் செய்யப்பட்ட ரகசியமான ஒப்பந்தத்தின் மூலம் அவர் குறைந்த சிறைத் தண்டனையை மட்டுமே அனுபவித்தார். இந்த ஒப்பந்தம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்படாததால், பின்னர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. 2019ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தில், சிறுமிகள் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஆனால் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே, 2019 ஆகஸ்ட் 10 அன்று எப்ஸ்டீன் சிறை அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் அமெரிக்காவின் பெரும் அரசியல்வாதிகள் முதல் உலகெங்கிலும் உள்ள முக்கிய புள்ளிகள் ஈடுபட்டுள்ளதால், இந்த மரணம் எத்தகையது என்பதை  உஙக்ள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதிகாரப்பூர்வமாக இது தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், சிறை கண்காணிப்பில் ஏற்பட்ட கடுமையான தவறுகள் பொதுமக்கள் சந்தேகத்தை அதிகரித்தன. அவரது மரணம் குற்றவியல் வழக்கை நிறுத்தினாலும், வெளிப்படைத்தன்மைக்கான கோரிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியது. சிவில் சமூகத்தில் இன்னும் இது தீவிர விவாதமாக மாறியது.

அதன்பின்னர் விசாரணைகள் எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளிகளின் மீது திரும்பின. குறிப்பாக, சிறுமிகளை வேலையில் அமர்த்தி கொண்டு வந்து,  பழக்கப்படுத்திய குற்றச்சாட்டில் கிஸ்லேன் மேக்ஸ்வெல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த குடிமக்கள் வழக்குகள் மூலம் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டன. 2024 முதல் 2026 வரை, அமெரிக்க நீதித்துறை அமைச்சகத்தின் மூலம் கூடுதல் ஆவணங்கள் பொதுவெளிக்கு வந்தன — இருப்பினும் பல பகுதிகள் இன்னும் மறைக்கப்பட்டே உள்ளன.

எப்ஸ்டீன் கோப்புகள் அமெரிக்காவைத் தாண்டி உலகளாவிய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. சில அரசியல் தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் கடந்த கால தொடர்புகள் குறித்து விசாரணைகளை எதிர்கொண்டன. உலகளாவிய சதி உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், செல்வம், அதிகாரம் மற்றும் நீதித்துறையின் பொறுப்புகள் குறித்த விவாதங்களை இந்த விவகாரம் தொடர்ந்து எழுப்பிய வண்ணம் உள்ளது.

உலகளாவிய அரசியல் லாபிக்கள் எவ்வாறு செயல்பட்டு வருகிறது, பெரிய பெரிய ஒப்பந்தங்கள் நிகழும் அல்லது உறுதி செய்யும் இடங்களில் எல்லாம் எப்படி காமக்களியாட்டம் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்பதை இந்த விவகாரம் வெளிச்சம் போட்டு காட்டி ஒரு பெரும் உரையாடலையும் தற்காலிக உலக தலைவர்கள் யார் என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

மற்றபடி எப்ஸ்டீன்  ஒரு சாதாரன ஆசிரியராக தனது வாழ்வை தொடங்கி எப்படி இத்தனை பெரும் செல்வாக்கு மிக்க மனிதர் ஆனார்?எப்ஸ்டீன்  யார் யாரை எல்லாம் தன்னுடைய தீவிற்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்? அங்கே சிறுமிகள் எல்லாம் நடனமாட உலக தலைவர்களில் பலர் எப்படி சிறுமிகளை தேர்வு செய்தார்கள்? அந்த சிறுமிகளை என்னவெல்லாம் செய்தார்கள்? யார் யார் எல்லாம் எப்ஸ்டீனின் நண்பர்கள் என்பதை நீங்கள் அனைவரும் கொஞ்சம் இணையத்தில் தேடுங்களேன்…

இதுவரை வெளிவந்துள்ள எப்ஸ்டீன்  தொடர்பான ஆவணங்கள் எவ்வளவு என்பதை மட்டும் இங்கே சொல்லி விடைபெறுகிறேன்.

35 லட்சம் ஆவணங்கள்
2,000 காணொளிகள்
180,000 புகைப்படங்கள்

ஆனால் இவை எல்லாம் உண்மை என்றாலும் அந்த ஒரே ஒரு படம், நடனம் ஆடும் படம் மட்டும் பொய் எனும் வாட்சப் யூனிவர்சிட்டியின் தலைமையகம் உள்ள நாட்டில் இருந்து இதனை எழுதுவதில் பெருமையடைகிறேன்.

-அ.முத்துக்கிருஷ்ணன்

(எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பதிவு. காண்க: https://www.facebook.com/share/1AXBBFfzqo/)

பின்னூட்டமொன்றை இடுக