குமரி திருவள்ளுவர் சிலை : ஆர்.எசு.எசு. கட்டுப்பாட்டிலா?

தமிழ்நாட்டின் தலைநகரில் திருவள்ளுவர் கோட்டமும், தென்குமரி முனையில் வானுயர்ந்த திருவள்ளுவர் படிமமும் அமைந்து பெருமை சேர்க்கின்றன. இப்பணிக்காக வரலாற்றில் கலைஞர் கருணாநிதி இடம் பெறுவார் என்பது திண்ணம்.

தென்குமரியைத் தன்வயமாக்கத் திட்டமிட்ட ஆர்.எசு.எசு. தம் மூத்த தொண்டர் ஏக்நாத் இரானடேவை அப்பணிக்காக அனுப்பியது. விவேகானந்தர் குமரி முனைப் பாறையில் தவம் இருந்த பின்னரே சிகாகோ மாநாட்டிற்குச் சென்றார் என்ற கட்டுக் கதையோடு தமிழகம் வந்த ஏக்நாத் இரானடே அந்தப் பாறையில் விவேகானந்தருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று அரசுகளை வலியுறுத்தி இசைவு பெற்றார். பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான அந்தப் பாறையை விட்டுத் தர கோயில் நிருவாகம் தொடக்கத்தில் மறுத்தது. ஆயினும் ஆர்.எசு.எசின் அரசியல் வலிமை அத்தடையைத் தூளாக்கியது. சிலை அமைக்க இசைவு பெற்ற ஏக்நாத் இரானடே சிலையைப் பாதுகாக்க மண்டபம் அமைக்கவும் முடிவு செய்து அப்பணியை முடித்தார். ‘விவேகானந்தா கேந்திரம்’ என்ற நடுவம் குமரியில் இருந்து சனாதன தருமத்தைக் காக்கச் செயல்படத் தொடங்கியது.

விவேகானந்தர் பாறைக்கு அருகே இருந்த இன்னொரு பாறையில் திருவள்ளுவர் சிலையை அமைத்து அதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ‘கேந்திரத்தின்’ தலைமையான ஏக்நாத் இரானடே விரும்பினார். அவரின் விருப்பத்தின்படி 1979ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் ம.கோ.இரா. தலைமையில் இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்சி தேசாய் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

1996இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள் திருவள்ளுவர் படிமத்தின் உயரத்தை 133 அடி என உயர்த்தி தமிழர் கட்டடக் கலையின் சிறப்பை உலகறியச் செய்தார். கி.பி. 2000ஆம் ஆண்டு சனவரி முதல்நாள் திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

அதுவரை குமரிமுனைக் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்குச் சென்ற படகுகள் அன்று முதல் திருவள்ளுவர் பாறைக்கும் சென்று வந்தன. இப்படகுச் சேவையை தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. திருவள்ளுவர் சிலை தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விவேகானந்தா கேந்திரத்தின் எண்ணப்படி திருவள்ளுவர் பாறையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு அரசு திருவள்ளுவரைத் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. உள்ளரசியல் செயல்பாடுகளின் வழியாக திருவள்ளுவர் பாறைக்குச் செல்லும் படகுப் பயணங்கள் தடுக்கப்பட்டன. அலை ஏற்றத் தாழ்வுகள் காரணமாக திருவள்ளுவர் பாறைக்குத் ‘தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்ற பலகை நிரந்தரமானது. கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் திருவள்ளுவர் சிலைக்குப் படகு விட வேண்டும் என்று கோரின. ஆயினும் அக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.

மக்களாகவே விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைத்துப் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப வேண்டும் என்று ஆள்வோர் பொறுமை காத்தனர். இந்திய ஒன்றிய பா.ச.க. அமைச்சர்கள் பாலம் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என்று அவ்வப் போது அறிவிப்புகளை வெளியிடுவார்கள். ஆனால் இவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்த திருவள்ளுர் அறக்கட்டளையின் எதிர் அறிக்கைகளே அம்முயற்சியை முறியடித்தன. ஏனெனில் குமரியில் விவேகானந்தா கேந்திரத்தின் வழியாக ஆர்.எசு.எசு. வளர்வதை குமரித் தமிழர்கள் எவரும் விரும்பவில்லை. எனவே சிறு எதிர்ப்புக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகள் முடங்கிப் போயின.

தம் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க் கட்சியாகிய தி.மு.க. வழியாகவே நிறைவேற்ற முடியும் என்ற நுட்பத்தை அறிந்து கொண்ட ஒன்றிய அரசு, இன்றைய தி.மு.க. அரசின் அறிவிப்பாகக் கண்ணாடிப் பாலம் திட்டத்தை முன் வைத்தது. தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணாடிப் பாலம் அமைத்தே தீருவோம் என்று முழங்கி அதை செயல்படுத்த முனைந்தார். தி.மு.க.வின் பா.ச.க. எதிர்ப்பு உண்மை என்று நம்பிய திருவள்ளுவர் அறக்கட்டளையினர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராசு ஆகியோர்களை அணுகி, கண்ணாடிப் பாலம் அமைத்தால் விவேகானந்தர் பாறை வழியாகவே திருவள்ளுவரைக் காண முடியும் என்றும் விவேகானந்தர் பாறையைக் காண தனிக் கட்டணத்தை கேந்திரம் பெற்று வருகின்ற சூழலில் அக்கட்டணத்தைச் செலுத்திய பின்னரே திருவள்ளுவரைக் காண நேரிடும் என்று விளக்கப்படுத்தினர். அப்படியெல்லாம் நேராது என்று அமைச்சர் பெருமக்கள் உறுதி அளித்தனர்.

அவர்கள் அளித்த உறுதிமொழிக்கு மாறாக, கண்ணாடிப் பாலத்தின் வழியாக மட்டுமே திருவள்ளுவரைக் காண முடியும் என்ற சூழலில் இன்றைக்கு விவேகானந்தா கேந்திரத்தினர் உருவா முப்பதை திருக்குறள் அன்பர்களிடமும், தமிழ்ப் பெருங்குடி மக்களிடமும் பெற்றுக் கொண்டு திருவள்ளுவரைக் காண விடுகின்றனர்.

நம் திருவள்ளுவர் இன்றைக்கு ஆர்.எசு.எசு. இயக்கத்திற்குப் பணம் பெற்றுத்தரும் கருவியாகப் பயன்படுகிறார். ஒன்றிய அரசின் சனாதனத்தை வேரோடு வீழ்த்தப் புறப்பட்ட திராவிடப் புலிகள் கேந்திரத்தின் அடாவடிக்குத் துணை போகின்ற திருப்பணியைச் செவ்வையாக ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்.

நாம் தமிழக அரசிடம் பாலம் அமைக்க வேண்டாம் என்றோம். வருமுன்னர் காவாமல் கேட்டினை விளைவித்து விட்டார்கள். இப்போதும் குடிமூழ்கி விடவில்லை. விவேகானந்தர் பாறை நிருவாகத்தை ‘கேந்திரத்’திடமிருந்து மீட்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இரண்டு பாறைகளையும் நிருவாகம் செய்தால் தமிழக அரசுக்கு மனமுவந்து முப்பது உருவாவை அளிக்கத் தமிழ் மக்கள் அணியமாக உள்ளார்கள்.

எனவே தமிழக அரசு கேந்திரத்திடமிருந்து விவேகானந்தர் பாறையை தம் வயப் படுத்த வேண்டும் என்று கோருகிறோம். அதுவே சனாதன தருமத்திற்கெதிரான உண்மையான முயற்சியாகும்.

-தமிழ்.முகிலன்(தலைவர்,தமிழர் கழகம்)

பின்னூட்டமொன்றை இடுக