சட்டமன்றத் தேர்தலில் எஸ்.யு.சி.ஐ பங்கேற்பு!

எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் ஆ ரெங்கசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,”17வது சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்றமுறை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசாங்கம் மறுபடியும் ஆட்சியில் தொடர முயற்சிக்கிறது. அதேசமயம், ஏகபோக கார்போரேட் ஆதரவு மதவெறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஊழலுக்குப் பெயர்போன அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர யத்தனிக்கிறது.

மக்களுக்கு இவர்கள் மேலுள்ள வெறுப்பை அறுவடை செய்ய தமிழினவாதம் பேசும் நா.த.க வும் திரை பிம்பத்தை முதலீடாகக் கொண்டு இளம் வாக்காளர்களின் ஒரு பிரிவினரை மாயைக்குள் மூழ்கடித்துவரும் த.வெ.க வும் களத்தில் இறங்கியுள்ளன.

இவை அனைத்தும், அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் காரணமான பொருளாதார தனியார்மய கொள்கையை கைவிடுவோம் என்றோ, அத்தியாவசியப் பண்டங்களை அரசே முழு கட்டுப்பாட்டில் எடுத்து குறைந்த விலையில் விநியோகிப்போம் என்றோ வாக்குறுதி அளிக்கவில்லை. கவர்ச்சிகரமான இலவசங்களையே மீண்டும் வாக்குறுதியாக அறிவித்துள்ளன.

இச்சூழலில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடிவரும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சி ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடுகின்றது. தமிழகத்தில், சென்னையில் ஆர்கே நகர் (வேட்பாளர் திரு அ மோகன்ராஜ்), பெரம்பூர் (திரு ஜோ செபஸ்டின்), தென் மாவட்டங்களில் பெரியகுளம் (திரு ஜெ ரஞ்சித்குமார்), மதுரை(வடக்கு) (திரு ம ஜெ வால்டேர்) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி. (திரு சா லெனின்துரை), மேற்கு வங்கத்தில் 230, கேரளாவில் 32, அஸ்ஸாமில் 42, ஆகிய இடங்களிலும் போட்டியிடுகின்றது.

ஒன்றிய பாஜக அரசாங்கம் கொண்டுவந்துள்ள, கல்வியை முற்றிலும் வியாபாரமாக்கி காவிமயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையையும் (NEP2020) மின்சாரத்தை தனியர்மயமாக்கும் மின்சாரச் சட்டம் 2025ஐயும், தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பையும் விவசாய விரோத வேளாண் சட்டங்களையும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சி எதிர்த்துப் போராடி வருகிறது. அவற்றை வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தி வரும் மாநில அரசாங்கங்களையும் எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.

ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்க தொடர்ந்து களமாடிக்கொண்டிருக்கும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக