நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட்!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்திட வெளியிலிருந்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் 08.05.2026 அன்று மாலை 3.00 மணிக்கு சென்னை சூளைமேடு, அமீர்ஜான் தெருவில் உள்ள ஏஐபிஇயூ அலுவலகம் “தாரக் இல்ல”த்தில் தோழர் கே.சந்தானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் மதவெறுப்பு அரசியல் சக்திகளை உறுதிபட தோற்கடித்துள்ள தமிழ்நாடு வாக்காளர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு பாராட்டுகிறது. போட்டியிட்ட அணிகளில் மிக அதிகமான இடங்களை தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் வழங்கியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதிக்கிறது.

அதிக இடங்களைப் பெற்ற தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு பதிலாக ஆர்எஸ்எஸ், பாஜக ஒன்றிய அரசின் அரசியல் கருவியாக செயல்படும் ஆளுநர் அவர்கள் தன்னிடம் தனிப்பெரும்பான்மையைக் கடிதம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழ்நாட்டில் அமல்படுத்தி புறவழியாக பாஜகவின் ஆட்சியை திணிக்க இதன் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கு இடமளிக்காத வகையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்திட வெளியிலிருந்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

-மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை செய்தி

பின்னூட்டமொன்றை இடுக