ஜனநாயக செயல்முறைகளில் தலித்துகள் முக்கியமான இடையீடுகளைச் செய்பவர்களாக உள்ளனர். இருப்பினும், தனிநபர் தலித் தலைவர்கள் பொதுமக்களால் தங்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அண்மைக் காலம் வரை அரிதாகவே இருந்து வந்தது. காக்ரோச் ஜனதா கட்சி (CJP)-யின் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக அபிஜீத் திப்கே உருவெடுத்திருப்பது, ஜனநாயகத்தின் இந்த மரபுவழி தர்க்கத்திற்குச் சவால் விடுக்கிறது. நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிரான ஜென்-ஸி (Gen-Z) இயக்கத்திற்கு தலைமையேற்கும் திப்கேயின் குறிப்பிடத்தக்க திறன், ஒரு தலித் நபர் பிரதான மதச்சார்பற்ற இயக்கத்தின் மக்கள் செல்வாக்குமிக்கத் தலைவராக உருவாக முடியும் என்ற சாத்தியத்தை முன்வைக்கிறது.
மரபுவழி தலித் தலைமை:
தேசியவாத வரலாற்றியல் எழுத்துகளில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தலும் பாதுகாப்பற்ற இழிநிலை உழைப்பும் என்ற கொடூரமான இருண்ட சிறையிலிருந்து முன்னாள் தீண்டப்படாத சாதியினரை உயர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த மிகப் பெரிய தலைவராக அடிக்கடி சித்திரிக்கப்படுகிறார். சமூக நீதிக்கான நிகழ்ச்சிநிரலுடன் அம்பேத்கரின் தொடர்பு மிகவும் முக்கியமானது என்றாலும், அதனை அளவுக்கு மீறி வலியுறுத்துவது, பொதுமக்களின் தலைவராகவும் நவீன தேசிய அரசின் முக்கியக் கட்டமைப்பாளராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை அடிக்கடி புறக்கணிக்கிறது. இத்தகைய ஒரே மாதிரியான சித்திரிப்பும் புறக்கணிப்பும், அம்பேத்கருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தலித் சமூகப் பின்னணியிலிருந்து உருவான தலைமையை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவதற்காக மேலும் பயன்படுத்தப்பட்டன. எந்தக் கட்சியிலோ அல்லது எந்தப் பதவியிலோ இருக்கும் ஒரு தலித் நபர், அவரது தனிப்பட்ட தகுதி அல்லது மதச்சார்பற்ற நம்பகத்தன்மையின் அடிப்படையில் அடையாளம் காணப்படுவதில்லை; மாறாக, சமூக நீதி நிகழ்ச்சிநிரலின் பயனாளியாகவும், தலித்துகளின் குறுகிய பிரிவினரின் நலன்களுக்குச் சேவை செய்ய நியமிக்கப்பட்டவராகவும் பெரும்பாலும் மதிப்பிடப்படுகிறார்.
கான்ஷி ராம் பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கியபோது, “பகுஜன்” என்ற பெயரின் கீழ் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சமூகக் குழுக்களின் ஒரு கற்பனைமிக்க அரசியல் கூட்டமைப்பை அவர் முன்வைத்தார். அவர்களை ஒன்றிணைப்பதையும், சமூக உயரடுக்கினரின் நிரந்தர ஆதிக்கத்திற்கு எதிராக அவர்களுக்கே உரிய கருத்தியல் மதிப்புகளையும் அரசியல் இலட்சியங்களையும் உருவாக்கிக் கொள்ள ஊக்குவிப்பதையும் அது நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், பெரும்பான்மை மக்களுக்கு தலைமையேற்கும் இந்த விருப்பம்கூட, பிரதான அரசியல் விமர்சகர்களால் குறுகிய தலித் அரசியலாக மதிப்பிழக்கச் செய்யப்பட்டு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தலித்துகள் அரசியல் கட்சிகளை உருவாக்கியுள்ளனர்; இருப்பினும், இந்தக் கட்சிகள் தலித் மக்கள்தொகையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் வரம்பிற்குள் இருந்து வருகின்றன. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சமூகங்களின் சமூக மற்றும் அரசியல் நலன்களுக்கும் சேவை செய்யக்கூடிய ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் சக்திகளாக உருவெடுப்பதில் தோல்வியடைந்துள்ளன. தலித் கட்சிகள் சமூக உயரடுக்கினரின் மரபுவழி அதிகாரத்திற்கு எதிராக அடிக்கடி அடிப்படையான சவால்களை எழுப்புவதால், அவை குறுகிய பிரிவினைவாத அமைப்புகளாக சட்டபூர்வத் தகுதியற்றவையாகக் காட்டப்படுகின்றன. பீகாரில் உள்ள லோக் ஜன்சக்தி கட்சியும், மகாராஷ்டிராவில் உள்ள வஞ்சித் பகுஜன் அகாடியும், தலித் அல்லாதோரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் தமக்கு இல்லை என்ற இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளன.
தலித்துகளால் பிறருக்கு தலைமையேற்க முடியாதா?
தேசிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் உச்சத் தலைமைகள் மரபாக சமூக உயரடுக்கினரின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்துள்ளன. ஆனால், இந்தத் தலைவர்கள் குறுகிய சாதி நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று கண்டிக்கப்படுவதில்லை. மாறாக, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சமூகக் குழுக்கள் எழுப்பும் பிரச்சினைகள் உட்பட பரந்த பொதுமக்களின் அக்கறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டபூர்வமான தலைவர்களாக அவர்கள் பாராட்டப்படுகிறார்கள்.
இந்தக் கட்சிகள், சமூக நீதி மற்றும் உள்ளடக்கத்தை நோக்கிய தங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், அவ்வப்போது தலித் தலைவர்களை முக்கிய அதிகாரப் பதவிகளில் நியமித்துள்ளன. உதாரணமாக, பங்காரு லக்ஷ்மண், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் டி. ராஜா ஆகியோரைச் சுட்டிக்காட்டலாம். எடுத்துக்காட்டாக, பாஜக, தலித்துகள் மற்றும் பிற விளிம்புநிலை சமூகக் குழுக்களைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கில், அமைப்பிலும் அரசாங்கத்திலும் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்குவதன் மூலம் “விளிம்புநிலை இந்துத்துவம்” (Subaltern Hindutva) என்ற குறிப்பிடத்தக்க அரசியல் உத்தியை உருவாக்கியுள்ளது. இருப்பினும், தலித்துகள் சுயாதீனமான அரசியல் முன்னெடுப்பை உருவாக்குவதைவிட, இந்த தேசியவாதக் கட்சிகளின் கருத்தியல் மற்றும் அமைப்புசார் இலக்குகளுக்கு சேவை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பே தொடர்ந்து நிலவுகிறது.
தலித்-பகுஜன் தலைமைகளும் கட்சிகளும் இத்தகைய நம்பிக்கையுடன் செயல்பட முடியாது. தலித்துகள், சாதி அடிப்படையிலான அரசியல் அமைப்புகள் மூலமாக மட்டுமே செயல்பட வேண்டும் அல்லது சமூக உயரடுக்கினரால் அமைக்கப்பட்ட உள்ளடக்கிய கட்சிகளில் பெயரளவிலான இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இந்த இருமுனை அணுகுமுறை, தலித்துகளை வெறும் சாதி உடல்களாக மட்டுமே சித்தரிக்கிறது; மேலும், ஒரு தலித் தலைவரோ அல்லது தலித் தலைமையிலான கட்சியோ பொதுமக்களின் சட்டபூர்வமான குரலாக உருவெடுக்கும் சாத்தியத்தையே தடுக்கிறது.
ஒரு புதிய தொடக்கம்:
திப்கே ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்திருப்பது ஒரு அடிப்படையான முறிவைக் குறிக்கிறது. ஜென்-ஸி தலைமுறை அவரது தலித் அடையாளத்தை உணர்ந்தது; ஆனால், அவரை வெறும் தலித் தலைவராக மட்டுமே பார்க்க மறுத்தது. அதேபோல், திப்கேவும் தலித்துகளின் குரலாக மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தலைவராக மக்கள் அரசியலுக்குள் நுழையத் தேர்வு செய்தார். அவர் ஒரு மதச்சார்பற்ற, உள்ளடக்கிய பிம்பத்தை உருவாக்கினார்; மரபுவழி தலித் அரசியல் சொல்லாடல்களை அடிக்கடி பின்னுக்குத் தள்ளினார். அவரது உரைகள் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கவலைகளை மையமாகக் கொண்டிருந்தன; அரசாங்கத்தைத் தீவிரமாக விமர்சித்தன; அதேசமயம் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் தேவையற்ற சர்ச்சைகளைத் தூண்டுவதை உணர்வுபூர்வமாகத் தவிர்த்தன.
நீண்ட காலமாக, அம்பேத்கர் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சாதிகளின் போராட்டங்களின் பெருமைக்குரிய, ஆனால் பெரும்பாலும் அந்த எல்லைக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட ஒரு குறியீடாக இருந்து வந்தார். திப்கேயின் தலைமையால், அம்பேத்கரும் “ஜெய் பீம்” என்ற முழக்கமும் ஊழல்மிக்க அரசியல் அதிகாரத்திற்கு எதிரான மதச்சார்பற்ற எதிர்ப்பின் குறியீடுகளாக அறிமுகப்படுத்தப்பட்டன; அதன் மூலம் ஏராளமான தலித் அல்லாதோரும் இந்தப் போராட்டத்தில் அணிதிரட்டப்பட்டனர். அம்பேத்கரின் படத்தை அவர் வெளிப்படையாகப் பயன்படுத்தியதும், அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களுக்கும் பொறுப்புக்கூறக்கூடிய ஆட்சிக்கும் அவர் அளித்த உறுதிப்பாடும், மரபாக தலித் அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட்ட கவலைகளைப் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளன. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அரசியல் ஊழல் என்ற பொதுவான பிரச்சினையை அம்பேத்கரிய கருத்தியல் விழுமியங்களுடன் இணைத்ததன் மூலம், திப்கே சமகால மக்கள் போராட்ட இயக்கங்களில் குறிப்பிடத்தக்க புதுமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தலித் தலைமையின் எதிர்காலம்:
திப்கேயின் தலைமையின் கீழ் நடைபெற்ற CJP போராட்டம், பொதுமக்கள் அணிதிரட்டலின் ஒரு புதிய வடிவத்தை வெளிப்படுத்தியது. அது ஜென்-ஸி தலைமுறையை மைய அரங்கில் நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ஆட்சியில் இருப்போருக்கு எதிராகக் குரல் கொடுக்க இளைஞர்களிடையே தனித்துவமான அச்சமின்மையையும் சுதந்திர உணர்வையும் உருவாக்கியது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் “ஜெய் பீம்” போன்ற தலித் குறியீடுகளுக்கும் இடையே உருவான தோழமை, அம்பேத்கரையும் தலித் அரசியல் மரபுகளையும் சமகால மக்கள் இயக்கங்களின் மையத்தில் நிலைநிறுத்தும் புதிய போராட்டக் கலாச்சாரத்தை உருவாக்கியது.
இந்த முன்னேற்றம், தலித் தலைமையும் அம்பேத்கரின் அரசியல் சிந்தனைகளும் சமூக நீதி என்ற நிகழ்ச்சிநிரலுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டவை அல்ல என்பதை நிரூபிக்கிறது. அநீதி, ஊழல் மற்றும் பொறுப்புக்கூறாத அரசியல் அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் பரந்த பொதுமக்களுக்கு அர்த்தமுள்ள தலைமையை வழங்கும் திறனும் அவற்றுக்கு சமமாக உள்ளது.
– ஹரிஷ் எஸ். வான்கெடே
கட்டுரையாளர் ஹரிஷ் எஸ். வான்கெடே, புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியின் அரசியல் ஆய்வு மையத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
(தி இந்து ஆங்கில நாளேட்டில் ஜூலை 31 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம். மொழிபெயர்ப்பாளரால் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது)
