நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 5 கோடி வழக்குகள்

நீதிபதி எஸ்.முரளிதர் தெரிவித்துள்ள அதிர்ச்சியளிக்கும் விவரங்கள்.

முதலில், மாவட்ட நீதித்துறை
தற்போது நமது மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.1 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் 80 சதவீதம் குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகும். ஒவ்வொரு மாதமும் சுமார் 29 லட்சம் வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்படுகின்றன. அதேவேளையில், மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள நமது நீதிபதிகள் ஒவ்வொரு மாதமும் சுமார் 24 லட்சம் வழக்குகளைத் தீர்த்து வைக்கின்றனர்.

நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 19,500 ஆக இருந்தாலும், எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை சுமார் 18,200 மட்டுமே. அதாவது, கிட்டத்தட்ட 1,300 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

நமது நாட்டின் மாவட்ட நீதித்துறையில், ஒரு நீதிபதிக்கு உள்ள வழக்குகளின் சுமை வியப்பூட்டும் வகையில் 2,750 வழக்குகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.6 கோடி வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்படுகின்றன; சுமார் 2.4 கோடி வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. எனவே, சுமார் 5 கோடி வழக்குகள் என்ற அளவில் நிலுவை எண்ணிக்கை தொடர்ந்து மாறாமல் உள்ளது.

அடிப்படையில், நமது மாவட்ட நீதித்துறை அதே இடத்தில் இருப்பதற்காகக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறது.

அடுத்து, உயர் நீதிமன்றங்கள்
தற்போது உயர் நீதிமன்றங்களில் 65 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 45 லட்சம் வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும்.

நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 1,122 ஆகும். ஆனால், பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 810 மட்டுமே. அதாவது, 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒரு நீதிபதிக்கு உள்ள வழக்குகளின் சுமை 8,000-க்கும் அதிகமாக உள்ளது. அதேவேளையில், 1980களில் மலிமத் குழு, ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நடைமுறையில் சாத்தியமான வழக்குச் சுமையாக 1,500 வழக்குகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நமது உயர் நீதிமன்றங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ அதே எண்ணிக்கையிலான வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இதன் பொருள், ஒட்டுமொத்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறத்தாழ அதே அளவிலேயே இருக்கிறது.

மீண்டும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அதே இடத்தில் இருப்பதற்காகக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து, உச்ச நீதிமன்றம்

தற்போது உச்ச நீதிமன்றத்தில் 93,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை சமீபத்தில்தான் 38 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒரு நீதிபதிக்கு உள்ள வழக்குகளின் சுமை 2,400-க்கும் அதிகமாக உள்ளது.

( 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-அன்று நீதிபதி எஸ். முரளிதர் ஆற்றிய 28-வது டி.எஸ். போர்கர் நினைவுச் சொற்பொழிவின் ஒரு பகுதி . தமிழாக்கம்: ரவிக்குமார் )

பின்னூட்டமொன்றை இடுக